வரவேற்கிறோம் ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்
EMAIL US AT svs.vinayagar@live.nl
CALL US NOW +31 223 620 313
DONATE NOW

விநாயகர் சதுர்த்தி

நலமும் வளமும் தரும் விநாயகர்  சதுர்த்தி
நலமும் வளமும் தரும் விநாயகர்  சதுர்த்தி

“ஓம்”எனும் பிரணவ மந்திரம் எல்லாவற்றுற்கும் மூலமாக அமைந்துள்ளது. “ஓம்”எனும் வடிவமாகவும், பிரணவ பொருளாகவும் விநாயகர் விளங்குகிறார் .

“விநாயகர்” என்றால் “தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்” என்று பொருள். விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். குணங்களின் தலைவரான கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு வருகின்ற விக்கினங்கள், வில்லங்கங்கள், இடர்கள் இடையூறுகள் அனைத்தும் விலகி ஓடும். எனவே தான் அன்று தொட்டு இன்றுவரை அனைவரும் விநாயகர் பூஜையை முதலில் கொண்டாடி வருகிறௌம்.

“சதுர்த்தி” என்பது ஒரு ‘திதி”. ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வருகிற நான்காவது நாள் சதுர்த்தி ஆகும். சதுர்த்தியன்று விநாயகப்பெருமானை நோக்கி விரதம் அனுசரிப்பது இந்துக்களிடையே வழக்கமாக உள்ளது.

ஆவணி மாதத்தில் வளர்பிறையில் நான்காம் நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இது விநாயகப் பெருமான் பிறந்த தினமாகும். விநாயகர் அவதாரம் மகிமை வாய்ந்தது. கயமுகன் என்ற அரக்கன் சிவபெருமானிடம் வரங்கள் பல பெற்று இருந்தான். அந்த வரத்தின் மகிமையால் தேவர் களைவும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான்.

தேவர்களை பூண்டோடு அழித்தொழிக்க எண்ணினான். அவன் கொடுமை தாங்காத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர் . கயமுகனை சம்ஹாரம் செய்து தேவர்களைக் காப்பாற்றுவதற்காக விநாயகப்பெருமான் சதுர்த்தியன்று அவதரித்தார். விநாயகர் கயமுகனுடன் போர்புரிந்த போது ஆயுதங்களால் அழியாத வரம் பெற்ற கயமுகன் பெருச்சாளி உருவம் கொண்டு விநாயகரை தாக்கினான். விநாயகர் அவனை தன் வாகனமாக்கி அருள்புரிந்தார்.

இனி….விநாயகர் அவதாரம் குறித்து புராணத்தில் கூறப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

ஒரு முறை கயிலாயத்தில் பார்வதி தேவி நீராடிக்கொண்டு இருந்தார். அப்போது தனக்கென்று ஒரு காவல் தெய்வம் வேண்டும் என்று விரும்பினார் . அப்போது குளியலுக்கு பயன்படுத்தும் மஞ்சளை குழைத்து அதில் அழகிய உருவம் செய்து, உயிர் கொடுத்து விநாயகப்பெருமானை தோற்றுவித்தார்.

விநாயகரை வீட்டுவாசலில் இருக்க வைத்து “நான் குளித்து கொண்டு இருக்கும் போது எவரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது” என்று கூறிச் சென்றார் . அந்தநேரம் பார்த்து வீட்டுக்கு திரும்பி வந்த சிவபெருமானை விநாயகர் வாசலில் தடுத்து நிறுத்தி விட்டார். கோபம்கொண்ட சிவபெருமான் விநாயகரை “யாரோ” என்று நினைத்து அவரது தலையை துண்டித்து விட்டார். இதை பார்த்த பார்வதி மிகவும் வருத்தப்பட்டார் . அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் வடக்கு நோக்கி தலைவைத்து தூங்கிக்கொண்டிருக்கும் உயிரினத்தின் தலையை வெட்டி கொண்டு வரும்படி தன் சேவகர்களுக்கு உத்தரவிட்டார். அவ்வாறே சேவர்களும் வடக்கு நோக்கி தலைவைத்து தூங்கிக்கொண்டிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி சிவனிடம் கொடுத்தனர் .

சிவபெருமான் விநாயகரது உடலுடன் யானைத் தலையை பொருத்தினார் . பூத கணங்களுக்கு அவரை தலைவனாக்கி மகிழ்ந்தார். அனைத்து மங்கள நிகழ்ச்சிகளுக்கும் தொடக்கத்தில் தமது மகனை வழிபட வேண்டும் என்று அவர் ஏற்பாடு செய்தார். விநாயகர் பல திருவிளையாடல்களை செய்துள்ளார். காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து காவிரி நதியை கவிழ்த்து பெருகி ஓடச் செய்தார். விபீஷணன் இலங்கைக்கு எடுத்துச் சென்ற ரெங்கநாதர் சிலையை தடுக்கும் விதத்தில் பாலகன் வடிவில் வந்து லீலைகள் புரிந்து சிலையை ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்தார். முருகன் வள்ளியை மணம் புரிவதற்கு யானை வடிவில் சென்று உதவி செய்தார். அனலாசரன், சிந்தூரன் ஆகிய அசுரர்களை விநாயகர் விஸ்வரூபம் எடுத்து அழித்தார். வியாசர் சொல்ல சொல்ல மகாபாரதத்தை எழுதினார்.

விரதம் இருப்பது எப்படி?

விநாயகர் சதுர்த்தியன்று வீட்டை சுத்தம் செய்து, கோலம் போட்டு அலங்கரிக்க வேண்டும். வாழைமரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில் சுத்தமான பலகையில் கோலம் போட வேண்டும். அதன்மீது தலைவாழை இலையைப் போட வேண்டும். நுனி பாகம் வடக்கு முகமாக இருக்க வேண்டும். இந்த இலை மீது பச்சரிசியைப் பரப்ப வேண்டும். அந்த அரிசியின் மீது களிமண்ணில் செய்துள்ள விநாயகர் விக்கிரகத்தை எழுந்தருளச் செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார் தான் விஷேசம். விநாயகருக்கு மங்கள ஆராத்தி காட்டி, வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் எனும் முக்கனிகள், கரும்பு, எள், கடலை, அப்பம், மோதகம், பொரி உருண்டை போன்றவற்றை நிவேதனம் செய்து, கணேஷ அஷ்டகம் கூறி பூஜை செய்து அவரை வழிபட வேண்டும். விநாயகர் புராணம் படித்து மங்கள ஆராத்தி எடுக்க வேண்டும். மறுநாள் புனர்பூஜையை கொண்டாட வேண்டும். தயிர்சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். அதன்பிறகு குளத்திலோ, கிணற்றிலோ பிள்ளையாரைக் கரைத்து விடலாம். பிள்ளையார் பூஜைக்கு அருகம்புல்லும், எருக்கம்பூவும் விசேஷமான ஒன்றாகும்.

விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள், விநாயகர் அருள்பெற்று அனைத்து நலன்களையும், சுகங்களையும் பெறுவார்கள். வாழ்க்கையில் துன்பம், இடைஞ்சல்கள் வராது.

பக்தர்கள் வாழ்வில் ஏற்படும் விக்கினங்களை அகற்றி ஆன்மிக வெற்றியை அருளும் அருட்தெய்வம் அவர். எனவே அவர் விக்கின விநாயகர் என அழைக்கப்படுகிறார்.