வரவேற்கிறோம் ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்
EMAIL US AT svs.vinayagar@live.nl
CALL US NOW +31 223 620 313
DONATE NOW

கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதம்

சிவபெருமானுடை அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. இந்த விரதத்தை அம்மை கௌரியே அனுஷ்டித்தார் என்றால் அதன் பெருமைக்கு நிகர் எதுவுமில்லை. அம்மை ஐயனின் இடப்பாகம் பெற்று அர்தநாரீசுவராக ஆனது இந்த விரத மகிமையால். கேதார கௌரி விரதம் புரட்டாதி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி நாள் தொடங்கி ஐப்பசி மாத அமாவாசை முடிய மொத்தம் இருபத்தொரு நாட்கள் இந்த விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.

கேதாரம் என்பது இமயமலைச்சாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைத்து வழிபட்டு அதன் பலனாக அர்த்தநாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரி விரதம் எனவும், ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகிறது.
மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களகரமாக இருக்க வேண்டிவும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை (கணவனை) வேண்டிவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

மாங்கல்ய பாக்கியமும், கணவன்இ,மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக்கியங்களும் நல்கும் விரதம் இந்த கேதார கௌரி விரதம். தும்பதியர் இருவரும் ஓருயிர் ஈருடலாக வரம் பெற இவ்விரதத்தினை விரும்பி அனுஷ்டிக்க வேண்டும். ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியான தம்பதிகளாய் வாழ உதவும் விரதம் இது. குடும்பப் பிரச்சனை உள்ளவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமையும் சுபீட்சமான வாழ்க்கையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும் பெண்கள் தமது இடது கையிலும் அணிந்து கொள்வர். சக்திரூபமான பார்வதிதேவி சிவனை நினைத்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று, அர்த்தநாரியாகவும் அர்த்த நாரீசுவரியாகவும் ஒன்றாகிய விரதமே கேதார கௌரி விரதமாகும். இவ்விரதத்தை லட்சுமி விரதம், அம்மன் விரதம், கௌரி நோன்பு, கௌரி காப்பு நோன்பு என்று பல பெயர்களில் தங்கள் தங்கள் குடும்ப வழக்கப்படி அழைப்பர்.

கேதார கௌரி விரதம் தோன்றிய வரலாறு

பிருங்கி என்ற முனிவர் அதி தீவிர சிவ பக்தர். சிவனைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டார். “ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன் என் கயிலாயநாதன்தான். அவனின்றி ஓர் அணுவும் அசையாது ”என்றெல்லாம் உள்ளார்ந்த பக்தியுடன், ஆலவாய் அழகனை மட்டுமே துதித்து வந்தார். பிற
கடவுள்களை சற்றும் சிந்திக்காத அவருடை போக்கு, சில சமயம் அக்கடவுள்களாலேயே அவமதிக்கும் வகையிலும் அமைந்ததுண்டு.

அப்படி ஒரு நிலைக்கு ஆளானவள் பார்வதி. கயிலாயத்தில் தன் கணவருடன் அமர்ந்திருக்கும் போது பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வருவதும், தன்னைத் திரும்பியே பார்க்காமல் போவதும் அவளுக்கு மனவருத்தத்தைத் தந்தது.

எப்படியாவது பிருங்கி முனிவரை, தன்னையும் வணங்கச் செய்யவேண்டும் என்று விரும்பிய உமையவள், பெருமானிடம் நெருங்கி அமர்ந்துகொண்டாள். இப்படி அமர்ந்திருக்கும்போது, தன்னைத் தவிர்த்து இவரை மட்டும் பிருங்கி முனிவரால் எப்படி வலம் வர முடியும்? என்று நினைத்தாள்.

வழக்கம் போல் பிருங்கி முனிவர் வந்தார். சிவனோடு உமையவள் நெருங்கி வீற்றிருப்பதைப் பார்த்தார். என்ன செய்வது என்று குழம்பினார். பிறகு தெளிவாகி ஒரு வண்டாக உருவெடுத்தார். இருவருக்கும் இடையே புகுந்து சிவனை மட்டும் வலம் வந்தார்.

இதைக் கண்டு வெகுண்டாள் தேவி. சக்தியும் சிவனும் ஒன்று என்ற தத்துவம் புரியாமல், தன் தலைவனை மட்டும் வணங்கும் இந்த முனிவரின் ஆணவத்தை அடக்க எண்ணினாள். தன்னை அவமானப்படுத்திய முனிவரின் கால்கள் முடமாகிப் போகச் சபித்தாள்.
அது உடனே பலித்தது. ஆனாலும், தன் பக்தனை அந்த நிலையிலேயே விட்டுவிட இறைவனுக்கு சம்மதமில்லை. அவரது கால்களை சரிசெய்ததோடு, மூன்றாவது ஒரு காலையும் உருவாக்கித் தந்தார். அதோடு ஒரு கோலையும் அளித்து, பிருங்கி முனிவர் ஊன்றிச் செல்லவும் வழி செய்து கொடுத்தார்.

தன் கணவர் முனிவருக்கே ஆதரவாக நடப்பதைப் பார்த்து அன்னை வெகுண்டாள். உடனே, தன்னை அவருடைய முழுமையான அன்புக்கு ஆக்கிக் கொள்ளத் தீர்மானித்தாள். அதற்கு தவமே சிறந்த வழி என்று நம்பி, பூலோகத்திற்கு வந்தாள். ஒரு வயல்வெளியைத் தேர்ந்தெடுத்தாள். சிவனை எண்ணி தவமிருந்தாள்.

கடுமையான தவம். அன்னையின் தவக் கடுமையியால் சுற்றி இருந்த மரங்களும்இ செடிகளும்இ கொடிகளும் கருகித் தீய்ந்தன. மனம் இளகினார் மகாதேவன். மேலிருந்து இறங்கி வந்தார். உமையவளுக்கு தரிசனம் தந்து அவளை ஆட்கொண்டார். “ஒரு நாளும் உமைப் பிரியாத வரம் வேண்டும்” என்று வேண்டினாள் அன்னை. “தந்தேன்”என்றார் மகாதேவன்.

“உங்களைக் பிரியாத” என்றால் அருகிலேயே இருப்பதல்ல. உடலோடு ஒன்றியதாக…..உடலைவிட்டுப் பிரிக்க முடியாதவளாக…..” என்று மகாதேவி வரம் கேட்டாள். புரிந்து கொண்டார் பரமன்..அவள் வேண்டிய வரத்தை அளித்தார். அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.

தேவிக்கு சந்தோஷம். இனி பிருங்கி முனிவரல்ல, யாருமே என்னை என் தலைவனிடமிருந்து பிரிக்க முடியாது. சிவன் வேறு, சக்தி வேறு என்று பிரத்துப் பார்ப்பவரகள், இனி இரண்டும் ஒன்றே என்பதை பரிபூரணமாக உணர வேண்டும் என்று சிவனுடன் சேர்ந்து விதி செய்தாள்.

இவ்வாறு அம்பிகை, இறைவனின் உடலில் ஒரு பாதியாகி, கணவனிடமிருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிக் கொண்ட நாள்தான் கேதார கௌரி விரதநாள். கேதாரம் என்றால் வயல். கௌரி என்ற பார்வதி வயல்வெளியில் தவமிருந்து சிவபெருமானின் அருளைப் பெற்றதால் இந்த விரதம் “கேதாரகௌரி விரதம்” என்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக தீபாவளி அன்றோ அல்லது தீபாவளிக்கு மறுநாளே இந்த விரதமும் மேற்கொள்ளப் படுகிறது. தீபாவளித் திருநாள் குடும்பத்தின் மகிழ்ச்சியைக் கூட்டும் நாள்.

கணவன் – மனைவியிடையே மாறாத அன்பை வளரத்துக் கொள்ள உதவும் பண்டிகை. தான், தன் கணவர், தன் குழந்தைகள், வீட்டிலுள்ள பிற பெரியவர்கள் என்று அனைவரிடையேயும் அன்பும், பாசமும் நீடித்து நிலைக்க வைக்கும் கொண்டாட்டம்.

தம் மாங்கல்ய பலம் நீடிக்கவும், தன் மீதான கணவரின் அன்பு என்றும் குறையாது நிலைத்திருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற கேதார கௌரி விரதத்தை சுமங்கலிகள் கடைப்பிடிக்கிறார்கள்.
அன்றைய தினத்தில், பண்டிகைக்கான பூஜைகளுக்குப் பிறகோ அல்லது முடிந்தால் அதற்கு முன்னதாகவோ, பூஜை அறையில் விளக்கேற்றி, சிவபெருமான் படம் அல்லது லிங்கம் அல்லது சிவ – பார்வதி படத்தின் முன் பக்தியுடன் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்.

சிவ துதிகளைப் பாட வேண்டும். அம்மன்- சக்தி பாடல்களைப் பாட வேண்டும். “ஓம் நமச்சிவாய. சிவாய நம ஓம், ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்” என்று பஞ்சாட்சர மந்திரத்தை அன்று முழுவதும் ஓதிக்கொண்டே இருக்க வேண்டும்.

முடிந்தால்இ சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யலாம். அந்த அபிஷேகப் பாலையே பிரசாதமாக அருந்தலாம். குடும்பத்தில் பிறருக்கும் கொடுக்கலாம். பாயாசம், அல்லது அப்பம் நைவேத்தியம் செய்யலாம். தம் கணவர் மற்றும் தம் குடும்ப உறுப்பினர் அனைவரது நலனுக்காகவும் உமையொரு பாகனை வேண்டிக்கொள்ளலாம்.